வந்தவாசி, நவ.10: வந்தவாசி அருகே 2 மாணவிகளை கர்ப்பமாக்கி தலைமறைவாக உள்ள லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுனன்(24), லாரி டிரைவர். இருவரும் உறவினர் என்பதால் அர்ச்சுனன் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். படிப்பு முடித்து குறிப்பிட்ட வயது அடைந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க மாணவியின் தாய் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியின் தந்தை சம்மதிக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மாணவியுடன் அர்ச்சுனன் நெருங்கி பழகி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து தப்பியோடி தலைமறைவான அர்ச்சுனனை வலை வீசி தேடிவருகிறார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்தவர் மோகன்(28), தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவியிடம் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக மனைவியை பரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மோகனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் மாணவியின் உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அதில், மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாய் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், இன்ஸ்பெக்டர் காந்திமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலை மறைவாக உள்ள மோகனை வலைவீசி தேடி வருகிறார்.
The post 2 மாணவிகளை கர்ப்பமாக்கிய 2 பேருக்கு போலீஸ் வலை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு வந்தவாசி அருகே appeared first on Dinakaran.
