×

தொட்டபெட்டா செல்லும் சாலையில் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள கற்பூர மரங்களை அகற்ற கோரிக்கை

ஊட்டி : ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள கற்பூர மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சமூக காடுகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளிலும் கற்பூர மரங்கள் அதிக அளவு நடவு செய்யப்பட்டன. குறிப்பாக வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் இந்த மரங்கள் அதிக அளவு நடவு செய்யப்பட்டன. புல்வெளிகள் மற்றும் சோலை காடுகளாக இருந்த பல்வேறு பகுதிகளிலும் இந்த மரங்கள் நடவு செய்யப்பட்டன. சாலையோரங்களிலும் ஏராளமான கற்பூரம் மரங்கள் நடவு செய்யப்பட்டன.

தற்போது இந்த மரங்கள் நெடுநெடுவான வளர்ந்து உள்ளதால் மழைக்காலங்களில் காற்று வீசும்போது விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி சில சமயங்களில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற மரங்களை அகற்ற வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற அபாயகரமான மரங்களை அகற்றுவதில் மெத்தனம் காட்டி வருகிறது.

இந்நிலையில், ஊட்டியிலிருந்து தொட்டபெட்டா செல்லும் சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு முதல் தொட்டபெட்டா சிகரம் வரையில் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இந்த மரங்கள் மழைக்காலங்களில் விழும் அபாயமும் உள்ளது. மேலும், இந்த மரங்கள் சாலையின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ளதால் சாலையில் எந்நேரமும் நிழல் விழுவதால் சாலையும் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post தொட்டபெட்டா செல்லும் சாலையில் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள கற்பூர மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thottapeta ,Ooty ,Dinakaran ,
× RELATED கைகாட்டி பகுதியில் குரங்குகள் தொல்லை