×

வேற்று மத மாணவனை காதலித்ததால் 9ம் வகுப்பு மாணவிக்கு விஷம் கொடுத்து ஆணவக்கொலை: தந்தை கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா கருமால்லூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஹாபிஸ். இவரது 14 வயதான மகள் அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் அதே பள்ளியில் படிக்கும் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பிளஸ் 1 மாணவனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் முகம்மது ஹாபிசுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னுடைய மகளை கண்டித்தார். ஆனால் அதன் பிறகும் அந்த மாணவி காதலை கைவிடவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மகளின் பேக்கில் ஒரு செல்போன் இருந்ததை ஹாபிஸ் கண்டுபிடித்தார்.

அந்த போனிலிருந்து மாணவி, காதலனை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த ஹாபிஸ், மகளை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கினார். இதன்பின் பலவந்தமாக வாயில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றி குடிக்க வைத்தார். அதைக் குடித்த சிறிது நேரத்திலேயே அந்த மாணவி மயக்கமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அந்த மாணவியின் உடலில் பலத்த காயங்கள் இருப்பதைப் பார்த்த டாக்டர்கள் உடனடியாக ஆலுவா போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீசார் மருத்துவமனைக்கு சென்று நடத்திய விசாரணையில், அந்த மாணவியை முகமது ஹாபிஸ் தாக்கி கட்டாயப்படுத்தி விஷம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முகமது ஹாபிஸ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த ஆணவக் கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வேற்று மத மாணவனை காதலித்ததால் 9ம் வகுப்பு மாணவிக்கு விஷம் கொடுத்து ஆணவக்கொலை: தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mohammed Habis ,Aluva Karumallur ,Ernakulam ,Kerala ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்