*சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
விகேபுரம் : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இதில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பாபநாசத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. குற்றாலத்தில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டி வரும் நிலையில் இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டி வருவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். அதுவும் விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் நின்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை பாபநாசம் வன சோதனை சாவடியில் வனச்சரகர் சத்தியவேல் அறிவுறுத்தலின்படி வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். சுற்றுலா பயணிகள் கொண்டு வந்த பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து அழித்தனர். அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பணிகள் சோப், ஷாம்பு போடாதவாறு வனத்துறை ஊழியர் கணேசன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.
The post மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு appeared first on Dinakaran.