×

கொலை வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது

 

பெரம்பூர், நவ.6: 4 கொலை உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். இவர் சமீபத்தில் செங்குன்றம் பகுதியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட முத்து சரவணனின் கூட்டாளி என்பது தெரிய வந்துள்ளது. நீலாங்கரை சரஸ்வதி நகர், 10வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (எ) சூழ்ச்சி சுரேஷ் (35). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வியாசர்பாடி பகுதியில் வசித்து, பின்னர் நீலாங்கரைக்கு வந்துள்ளார். 2013ம் ஆண்டு பாட்ஷா என்பவரை எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வைத்து இவர் கொலை செய்தார்.

மேலும் செங்குன்றம் பகுதியில் ஜப்பான் சரவணன், சோழவரம் பகுதியில் சாலமன், வில்லிவாக்கம் பகுதியில் வழக்கறிஞர் ராஜேஷ் உள்ளிட்ட நபர்களை கொலை செய்த வழக்கிலும் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவர் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இதில் பாட்ஷா கொலை வழக்கில் தொடர்ந்து இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதேபோன்று பல்வேறு வழக்குகளில் இவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவரை கைது செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார், நீலாங்கரை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் சூழ்ச்சி சுரேஷை கைது செய்தனர். பின்னர் அவரை எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சூழ்ச்சி சுரேஷ் சமீபத்தில் செங்குன்றம் பகுதியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட முத்து சரவணனின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொலை வழக்குகளில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது