×

தெலங்கானா முதல்வரை எதிர்த்து ‘தேர்தல் மன்னன்’ மனு தாக்கல்

திருமலை: தெலங்கானா முதல்வரை எதிர்த்து சேலத்தை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கு வருகிற 30ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் முதல் நாளில் சுயேச்சை வேட்பாளரான சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் போட்டியிடும் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பத்மராஜன் இந்தியா முழுவதும் நடந்த பல தேர்தல்களில் போட்டியிட 236 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தால் பல இடங்களில் போட்டியிட்டுள்ளதால் ‘தேர்தல் மன்னன்’ என்றும் பத்மராஜன் அழைக்கப்படுகிறார். 5 ஜனாதிபதி, 5 துணை ஜனாதிபதி, 32 மக்களவை, 72 சட்டசபை, 3 எம்எல்சி, 1 மேயர், 3 தலைவர் என்று பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். வாஜ்பாய், கலைஞர், ஜெயலலிதா என்று பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை எதிர்த்து பத்மராஜன் போட்டியிட்டுள்ளார். தற்போது தெலங்கானா முதல்வரை எதிர்த்து முதல்முறையாக அவர் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி சித்திப்பேட்டை மாவட்டம் கஜ்வெல் தொகுதியில் முதல்வர் சந்திரசேகரராவுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் கடந்த 2 தேர்தல்களில் வெற்றி பெற்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தெலங்கானா முதல்வரை எதிர்த்து ‘தேர்தல் மன்னன்’ மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Thirumalai ,Election ,King ,Padmarajan ,Salem ,Prime Minister of ,Dinakaran ,
× RELATED தெலங்கானா மருந்து கம்பெனியில்...