×

தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக தாயகம் திரும்ப உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ்

டெல்லி: ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக தாயகம் திரும்ப உள்ளார். மிட்செல் மார்ஷ் நாடு திரும்புவது உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கான 3 மற்றும் 4வது இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக தாயகம் திரும்ப உள்ளார். அவர் அணியில் இல்லாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே அந்த அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இரு ஆல்ரவுண்டர்களும் அணியில் இல்லாமல் நாளை மறுநாள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட தொடரிலிருந்து வெளியாகும் நிலையில் உள்ளதால் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல் ஆகியோருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி, சீன் அபோட், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோரில் சிலர் இங்கிலாந்துடனான போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தனிப்பட்ட காரணங்களுக்காக அவசரமாக தாயகம் திரும்ப உள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் appeared first on Dinakaran.

Tags : Mitchell Marsh ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!