×

3 வாரங்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடுக… யூடியூப்பர் டி.டி.எஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு!!

சென்னை: பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கைதான டிடிஎஃப் வாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூப்பர் டி.டி.எஃப் வாசன் பைக் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் மீது பாலுச்செட்டிசத்திரம் போலீசார் ஐந்து பிரிவின் கீழ், வழக்குப்பதிந்து கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவானது இது வரை நான்கு முறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 4 முறை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு கடந்த 45 நாட்களாக நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதி வரை 11நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் அண்மையில் தாக்கல் செய்த ஜாமீன் மனு, இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிஎஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவரால் வாகனம் ஓட்ட முடியாது என்றும் தெரிவித்தார். மேலும் 45 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் வாசனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் 3 வாரங்களுக்கு காவல்நிலையத்தில் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும், பைக்குகளை எரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post 3 வாரங்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திடுக… யூடியூப்பர் டி.டி.எஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : TDF ,Vasan ,CHENNAI ,Chennai High Court ,TDF Vasan ,
× RELATED யூ டியூபர் டிடிஎஃப் வாசனின், இருசக்கர...