×

வடபொன்பரப்பி போலீசாரை கண்டித்து 6 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சி, நவ. 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த எல்லன்பட்டி கிராமத்தை சேர்ந்த வள்ளி மற்றும் அவரது 2 மகன்கள், அதே கிராமத்தை சேர்ந்த ராதிகா ஆகியோர் குடியினர் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக வள்ளி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் வள்ளி உயிரிழப்புக்கு ராதிகா தான் காரணம் எனக் கூறி காவல்துறையினர் துன்புறுத்தி வருவதாகவும் இந்த வழக்கின் விசாரணைக்காக ராதிகாவின் செல்போன் வாங்கி வைக்கப்பட்டதை விசாரணை முடிந்தும் செல்போனை வடபொன்பரப்பி காவல்துறையினர் தர மறுப்பதாகவும், இதுகுறித்து வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் பலமுறை ராதிகா நேரில் சென்று முறையிட்டு காவல்துறையினரிடம் கேட்டதற்கு செல்போன் தர மறுத்து ராதிகாவை போலீசார் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த ராதிகா நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் அறை முன்பு தனது 6 வயது குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்து உடலில் தண்ணீர் ஊற்றினர். பின்னர் நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தற்கொலைக்கு முயன்ற ராதிகா மற்றும் அவரது 6 வயது குழந்தையை கள்ளக்குறிச்சி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனுப்பி வைத்தனர். வடபொன்பரப்பி போலீசாரை கண்டித்து குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வடபொன்பரப்பி போலீசாரை கண்டித்து 6 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Vadaponparappi ,Kallakurichi ,Valli ,Ellanpatti ,Shankarapuram, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...