×

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது; ஒன்றிய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சமூகநீதியை வழங்கும் என்பதால், ஒன்றிய அரசு தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைத்து நிலைகளிலும் உறுதியான நிலையில், அதற்கான பொறுப்பை தமிழக அரசு தட்டிக்கழிப்பது வருந்தத்தக்கது.

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். இவ்வளவு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகும், இணைய இதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த முதலமைச்சர், ”ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி கிடைக்க வழி வகுக்கும். ஆகவேதான் ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளேன்” என விடையளித்திருக்கிறார்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான சிக்கலில் தமிழக அரசின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் பார்க்கும் போது, சமூக நீதிக்கு எதிரான சக்திகளால் முதலமைச்சர் தவறாக வழி நடத்தப்படுகிறாரோ? என்று ஐயப்படத் தோன்றுகிறது. அண்டை மாநிலங்களின் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தாலே சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்த கள நிலவரங்களை புரிந்து கொள்ள முடியும். ஆந்திரத்தில் வரும் 15ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். கர்நாடகத்தில் 2015ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நவம்பர் மாதம் தாக்கல் செய்யும்போது அதை தமது அரசு ஏற்று, செயல்படுத்தும் என்று முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்கனவே மூன்று முறை கிடைத்தன. ஆனால், மூன்று முறையும் அந்த வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது. அந்த தவறுகளுக்கு தீர்வு காணும் வகையிலாவது இப்போது தமிழக அரசு சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sadiwari ,Tamil Nadu ,Ramadas ,Phamaka Chennai ,Phamaka ,Sathiwari ,Bamaka ,Dinakaran ,
× RELATED அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும்...