×

மோசமடைந்து வரும் காற்றின் தரம்.. டெல்லியில் நாளை முதல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து டீசல் பேருந்துகளுக்கும் தடை!!

டெல்லி : டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் நாளை முதல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து டீசல் பேருந்துகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுற்றுசூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அதற்கு முன்பாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

இதனால் குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் கடந்த ஆண்டு அக் 29ம் தேதி 397 ஆக இருந்த காற்று தரக்குறியீடு தற்போது 325 ஆக குறைந்துள்ளதை சுட்டிக் காட்டிய சுற்றுசூழல் அமைச்சர் கோபால் ராய், இதனை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

டெல்லியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மாசுக்களை ஏற்படுத்தும் எரிபொருட்களில் இருந்து இயற்கை எரிவாயுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிவப்பு சிக்னலின் போது, வாகனங்களின் எஞ்சினை அணைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். நாளை முதல் வெளி மாநிலங்களில் டீசலில் இயங்கும் பேருந்துகள், டெல்லி – ஏசிஆர் பகுதியில் நுழைய தடைவிதிக்கப்படுவதாகவும் மாற்று எரிபொருளை பயன்படுத்த அறிவுறுத்தப்படும் என்றும் கூறினார்.

The post மோசமடைந்து வரும் காற்றின் தரம்.. டெல்லியில் நாளை முதல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து டீசல் பேருந்துகளுக்கும் தடை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!