×

டி.டி.எஃப் வாசனுக்கு 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு: காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம்: டி.டி.எஃப். வாசனுக்கு நவம்பர் 9 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை ஜாமின் நிராகரிக்கப்பட்ட நிலையில் 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், காணொலி மூலம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி இனியா கருணாகரன், டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவலை 3 முறை நீட்டித்து உத்தரவிட்டார். ஜாமீன் கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

டி.டி.எஃப் வாசனின் ஜாமின் மனுவை ஏற்கனவே தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் காவலிலேயே இருக்க வேண்டும் என்றும் அதுவே அவருக்கான பாடம் எனவும் கூறியிருந்தது. இந்நிலையில் டி.டி.எஃப் வாசனுக்கு 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post டி.டி.எஃப் வாசனுக்கு 4-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு: காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DTF Vasan ,Kanchipuram Judicial Arbitral Tribunal ,Kanchipuram ,TDF ,Kanchipuram Judicial Magistrate Court ,Vasan ,DDF Vasan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...