×

மெட்ராஸ் ஐ… தப்பிப்பது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவர் பி.ரங்கநாதன்

சமீபத்தில் தமிழகத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் சளி, காய்ச்சலுடன் சேர்ந்து மெட்ராஸ் ஐ என்ற கண் நோய் மக்களிடையே பரவி வருகிறது.இந்த கண் நோய் கண்ணில் கன்சங்டிவா (Conjunctiva) என்ற வெள்ளை படலத்தில் ஏற்படும் நோயாகும்.இது அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது.இதனை முதன் முதலில் சென்னை எக்மோர் பிராந்திய கண் மருத்துவமனையில் கண்டு பிடிக்கப்பட்டதால் இதனை நாம் மெட்ராஸ் ஐ என்று அழைக்கிறோம்.

இந்த நோய் வைரஸ் கிருமியினால் வருவதால் இரண்டு வாரங்களில் எளிதில் சிகிச்சை மூலம் சரியாகும் தன்மை கொண்டாலும், இது கருவிழி பாதிப்பை ஏற்படுத்தி கண்ணில் கருவிழியில் சிறுசிறு தழும்பை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது.மேலும் இதனுடன் சேர்ந்து வரும் பாக்டீரியா கிருமி பாதிப்பு வர வாய்ப்புள்ளது.இதனால் கண் மருத்துவரின் தொடர் சிகிச்சை அவசியம்.

கண்ணில் எரிச்சல், கண் வலி, கண் சிவத்தல், கண்ணில் மண் விழுத்தைப் போல் உறுத்தல், கண் பீளை மற்றும் நீர் வருதல், காலை எழும் போது கண் ஒட்டிக்கொள்ளுதல், கண்ணில் இரத்தம் கலந்த நீர் வடிதல்,கண் மங்கலாக தெரிதல் போன்ற அறிகுறிகளுடன் வரும் இந்த கண் நோயானது சளிக்காய்ச்சலுடன் சேர்ந்து வரலாம்.மேற்கண்ட அறிகுறிகளுடன் உங்களுக்கு மெட்ராஸ்ஐ இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும்.

கண் மருத்துவர் பரிந்துரையின்படிதான் மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.நீங்களாகவே சுய வைத்தியம் செய்துகொள்வதோ அல்லது மூர்த்தி பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் கண்ணில் கருவிழி புண் கிளாக்கோமா, மற்றும் கண்ணில் தூசி விழுந்து அதனால் ஏற்படும் பாதிப்பு இவைகளில் கண் சிவந்து காணப்படும். இவற்றை மருந்து கடைகளில் உள்ளவர்கள் மெட்ராஸ் என்று நினைத்துக்கொண்டு ஸ்டீராய்டு கலந்த மருந்து கொடுக்க வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தும்போது உங்கள் பார்வை பாதிக்க வாய்ப்புள்ளது ஆகவே மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தைப் பயன்படுத்தக்கூடாது.

உங்களுக்கு இந்த பாதிப்பு முழுவதும் சரியாக 15 நாட்கள் ஆகும்.கண் மருத்துவர் குறிப்பிடும் கால இடைவெளியில் உங்கள் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.நீங்கள் படுக்கும் போர்வை, தலையணை உறை, பயன் படுத்தும் துண்டு கைக்குட்டை போன்றவற்றை தினமும் சுத்தமாக துவைத்து பயன்படுத்தவும்.மெட்ராஸ் ஐ நோய் வந்தவர்கள் கைக் குட்டையால் கண்களை துடைப்பதை தவிர்க்கவும். வீட்டில் ஒரு சுத்தமான பாத்திரத்தில் பஞ்சை போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.

தண்ணீரை சூடு குறைந்தவுடன் வடிக்கட்டி பஞ்சை மட்டும் பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அதனைக் கொண்டு கண்ணை துடைத்தவுடன் பஞ்சை குப்பையில் போட்டு விடவும். ஒரு முறை கொதிக்க வைத்த பஞ்சை ஆறு மணி நேரம் பயன் படுத்தலாம். ஒவ்வொரு முறையும் பஞ்சை எடுக்கும்போது கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

தங்களின் முகத்தை ஈரமான துண்டை வைத்து துடைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் தாங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி தனியாக படுத்துக்கொள்ள வேண்டும் தங்களின் கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவி அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் தங்கள் கண்ணுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன் மருந்து போட்டபின் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் கைகளை கண்ணில் தொடக்கூடாது. அப்படி கண்ணைத் தொட நினைத்தால் கைகளை சுத்தமாக கழுவிக்கொண்டு தொட்டால் உங்களுக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு வர வாய்ப்பு குறைவு. உங்கள் குழந்தைகள் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். ஏனென்றால் உங்கள் குழந்தை மூலம் பல மாணவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

மெட்ராஸ் ஐ பாதித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் செல்போன் அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.நல்ல ஆரோக்கியமான நீர்ச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துள்ள உணவு, உறக்கம் மற்றும் கண்ணுக்கு ஓய்வு நோய் பாதிப்பை விரைவில் குணமடைய செய்யும்.நீங்கள் பஸ் மற்றும் ரயில் பயணம் மேற்கொண்டால் நீங்கள் போர்வை மற்றும் தலையனை எடுத்து சென்று பயன் படுத்தவும்.

கண்ணில் சிவப்பு வந்தவுடன் மெட்ராஸ் ஐ என்று நினைத்துக் கொண்டு தாங்களாகவே மருந்துக்கடையில் சென்று டியூப் மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால், விளக்கெண்ணெய் பயன்படுத்தக் கூடாது. மருந்துக்கடை வைத்திருக்கும் நண்பர்கள் மெட்ராஸ் ஐ நோய் உள்ளவர்கள் தங்களை அணுகினால் அவர்களை கண் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க அறிவுரை கூறுங்கள்.

இரு கண்ணில் மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர் வெது வெதுப்பான நீரினால் தலைக்கு குளிக்கலாம்.ஒரு கண்ணில் பாதிப்பு உள்ளவர்கள் முகத்தை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம்.

தனித்திருத்தல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மூலம் மெட்ராஸ் ஐ பரவாமல் தடுக்கலாம்.இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோயாகும் என்பதால் சமூகப் பரவலை தடுக்க மேற்கண்ட அறிவுரைகளை தவறாது கடைப்பிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

The post மெட்ராஸ் ஐ… தப்பிப்பது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Dr. ,P. Ranganathan ,Tamil Nadu ,Madras ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!