×

பல்லாவரம் அருகே நள்ளிரவில் பயங்கரம் பல்லாவரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: 40 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை

 

சென்னை: பல்லாவரம் அருகே நாயை கல்லால் அடிப்பதை தட்டிக்கேட்ட மூதாட்டியை படுகொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த பம்மல், கிரிணீகோரி தெருவை சேர்ந்தவர் ஜோதி (66). இவரது கணவர் தேவராஜ். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தனது மகன் சம்பத் (43), மருமகள் கோமதி (40), மற்றொரு மருமகள் ஆனந்தி (35), பேரன் மிதுன் (17), ரோணித் (15) ஆகியோருடன் ஒரே வீட்டில் ஜோதி கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் ஜோதி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த தெரு வழியாக வந்த வாலிபர்களை பார்த்து, சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பலமாக குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் வாலிபர்கள், சாலையில் கிடந்த கற்களை எடுத்து நாய்களை விரட்டி விரட்டி அடிக்க தொடங்கினர். அவர்களின் அடியிலிருந்து தப்பிப்பதற்காக நாய்கள் நாலாபுறமும் சிதறி ஓடவே, வாலிபர்களும் விரட்டி விரட்டி கற்களால் அடித்துள்ளனர்.

இப்படி விரட்டி அடித்த கற்களில் ஒன்று ஜோதி வீட்டில் உள்ளே வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதி அவரது மகன் சம்பத், மருமகள்கள் மற்றும் பேர பிள்ளைகள் என்று அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்து, ஏன் இவ்வாறு நாயை அடிக்கிறீர்கள். அமைதியாக செல்லக் கூடாதா என்று கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த 4 வாலிபர்களும், தங்களது நண்பர்களுக்கு போன் செய்து துணைக்கு வரவழைத்தனர். அவ்வாறு ஒரே நேரத்தில் விரைந்து வந்த 40க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஜோதி வீட்டில் உள்ளே நுழைந்து அவரையும், அவரது மகன், மருமகள் பேரப் பிள்ளைகளையும் சரமாரியாக தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த ஜோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மகன் சம்பத்திற்கு முதுகு மற்றும் வயிற்றில் பீர்பாட்டிலை உடைத்து கிழித்துச் சென்றனர். இதனிடையே மூதாட்டி ஜோதி உயிரிழந்தது தெரிந்ததும், வெறியாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.

இதுகுறித்து, சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மூதாட்டி ஜோதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தாக்குதலில் ஈடுபட்டு தப்பியோடிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பல்லாவரம் அருகே நள்ளிரவில் பயங்கரம் பல்லாவரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: 40 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Pallavaram Panic ,Pallavaram ,Chennai ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து 2 பேர் பலி