×

கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு துவக்கக் கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயவெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்கள் ஏராளமாக உள்ளன. இங்கு தினசரி பல லட்சம் பேர் சாமி தரிசனம் செய்கின்றனர். ஒவ்வொரு கோயிலிலும் பக்தர்கள் குறைந்தது 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போது திடீரென உடல் நல குறைவு ஏற்படுவோருக்கு முதலுதவி செய்தவற்கான சித்த மருத்துவ பிரிவு அமைக்க வேண்டியது அவசியம். தமிழ்நாட்டிலுள்ள 48 முக்கிய கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு அமைக்க ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் 6 கோயில்களில் மட்டுமே உள்ளது.

கொரோனா நோய் தொற்று காலத்தில் சித்த மருத்துவம் மிக முக்கிய பங்கு வகித்தது. எனவே, ஸ்ரீரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோவில், நெல்லையப்பர் கோயில், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோயில்களில் உடனடியாக சித்த மருத்துவ பிரிவை துவக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.தனபால் ஆகியோர், மனுவிற்கு அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு துவக்கக் கோரி வழக்கு: அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Charity department ,Madurai ,Dr. ,Jayavenkatesh ,Jaihindpuram, Madurai ,ICourt ,Tamil Nadu ,Charities Department ,Dinakaran ,
× RELATED கோயில் நிதி ரூ.86 லட்சம் கையாடல் மாஜி...