×

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்!: ராஜ்பவன் மீதான தாக்குதல் குறித்த புகாரை பதிவு செய்யவில்லை.. போலீஸ் மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு..!!

சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரை போலீஸ் பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கிண்டி, சர்தார் பட்டேல் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகை முன், பிரபல ரௌடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை பிடித்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். எதற்காக பெட்ரோல் குண்டு வீசி, கவர்னர் மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது.

நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் பாட்டில் வீசியதாக கைதான ரவுடி கருக்கா வினோத் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரவுடி கருக்கா வினோத்தின் தாயார் சாவித்ரி மற்றும் சகோதரர் முனியாண்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கருக்கா வினோத் யாருடன் தொடர்பில் இருந்தார் என்ற விவரங்களை கேட்டுள்ளனர்.

The post பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம்!: ராஜ்பவன் மீதான தாக்குதல் குறித்த புகாரை பதிவு செய்யவில்லை.. போலீஸ் மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Governor's ,House ,Chennai ,Governor's House ,Rajbhavan ,Governor House ,Dinakaran ,
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...