×

பல்வேறு ஊழல் செய்து உள்ள பாஜ ஊராட்சி தலைவரை கண்டித்து அதிமுக துணைத்தலைவர் போராட்டம்

பல்லடம்: பல்லடம் அருகே மாதப்பூர் பாஜ ஊராட்சி தலைவரை கண்டித்து அலுவலகத்துக்குள் அமர்ந்து அதிமுக ஊராட்சி துணைத்தலைவர் திடீரென நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக பாஜவை சேர்ந்த அசோக்குமார் இருந்து வருகிறார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் (அதிமுக) என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நேற்று அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் சுப்பராயன், 9வது வார்டு உறுப்பினர் பரிமளா ஆகியோர் ஊராட்சி தலைவர் மீது ஊழல் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் அவர்களது இல்லத்திற்கு வீட்டு வரி தாமதமாக கட்டியதாக கூறி ஊராட்சி தலைவர் அவர்களது வார்டு உறுப்பினர் பதவியை நீக்கம் செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சிகள்) சுப்பராயன், பரிமளா முறையிட்டுயிள்ளனர். ஊராட்சி மன்றம் தீர்மானம் மட்டுமே நிறைவேற்ற முடியும். பதவி நீக்கம் குறித்து மாவட்ட கலெக்டர்தான் முடிவு செய்வார் என அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முறையாக மாதம் தோறும் நடைபெறும் சாதாரண மன்ற கூட்டம் நடைபெறுவதில்லை என்றும், நாளை மறுநாள் சாதாரண மன்றக்கூட்டம் நடைபெறுவதாக அறிவித்து அதற்குரிய கூட்டப்பொருள் (அஜன்டா) நகல் கொடுக்கவில்லை என்றும் ஊராட்சி தலைவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் (அதிமுக) அலுவலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

The post பல்வேறு ஊழல் செய்து உள்ள பாஜ ஊராட்சி தலைவரை கண்டித்து அதிமுக துணைத்தலைவர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,vice-president ,BJP panchayat ,Palladam ,AIADMK panchayat ,Madapur BJP panchayat ,vice- ,Dinakaran ,
× RELATED கே.எம்.சி.எச். மருத்துவமனையில்...