×

தாயை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் பெயின்டர் சரமாரி வெட்டி கொலை: நண்பர்கள் 5 பேர் கைது

வேளச்சேரி: பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர், 3வது பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (28), பெயின்டர். இவரது நண்பர்கள் அதேபகுதியை சேர்ந்த சரத்குமார் (24), ஜெபராஜ் (21), இமானுவேல் (20). வேளச்சேரி ரயில்வே குடியிருப்பு பகுதியை சேர்ந்த திலோதீஸ்வரன் (22), முகமது ஷகில் (20). கடந்த 22ம் தேதி இரவு இவர்கள் பிரபல பைக் ஷோரூம் அருகே, ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த 5 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாந்த்தை சரமாரியாக வெட்டினர். இதில், படுகாயமடைந்த அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதை பார்த்த 5 பேரும் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த பிரசாந்த்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த மருத்துவமனைக்கு விரைந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 5 பேரை தேடி வந்தனர். இதற்கிடையே, பிரேத பரிசோதனையில், பிரசாந்தின் மர்ம உறுப்புகள் சிதைக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், மேடவாக்கம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் பதுங்கி இருந்த 5 பேரையும் மடக்கி பிடித்து போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘பிரசாந்த் எங்கள் அனைவரையும் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதும், எங்களை பற்றியும், எங்களுடைய தாயை பற்றி தரகுறைவாகவும், இழிவாக பேசுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். அதனால் ஆத்திரத்தில் இருந்த நாங்கள் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த அவரை தனியாக அழைத்து சென்று சரமாரியாக வெட்டிக் கொன்றோம், என தெரிவித்தனர். இதையடுத்து, 5 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

The post தாயை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் பெயின்டர் சரமாரி வெட்டி கொலை: நண்பர்கள் 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Velachery ,Prashanth ,Pallikaranai ,Maylai Balaji Nagar ,3rd Ward ,
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...