×

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை மீண்டும் நிராகரித்தார் ஆளுநர்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் கடந்த 13.4.2020 முதல் பதவியில் இருந்து வந்தார். உறுப்பினர்களாக முன்னாள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் க.அருள்மதி, ம.அரோக்கியராஜ் ஆகிய 4 பேர் இருந்து வந்தனர். இதில் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த கா.பாலச்சந்திரனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, உறுப்பினராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன் டிஎன்பிஎஸ்சியின் பொறுப்பு தலைவராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து அவர் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைளில் தமிழக அரசு இறங்கியது. இதைத் தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களை தேர்வு செய்து ஒப்புதலுக்காக தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது. அதில் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு அனுப்பிய தலைவர், உறுப்பினர்களுக்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒரு மாதமாக கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்து இருந்தார்.

ஆகஸ்ட் 22ம் தேதி டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென திருப்பி அனுப்பினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களை கோப்பாக தயாரித்து தமிழக அரசு ஆகஸ்ட் 31ம் தேதி மீண்டும் திரும்ப அனுப்பியது. அதில் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அதில் இடம் பெற்று இருந்தது.

இந்த நிலையில் 2வது முறையாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் செய்வதற்கான கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதில், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் 62 வயது வரையில் மட்டுமே இருக்க முடியும். ஆனால் சைலேந்திர பாபுவுக்கு தற்பொழுது 61 வயது ஆகிறது. எனவே, அவருக்கு வழங்க முடியாது. மேலும் தலைவர் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி வெளிப்படை தன்மையுடன் நடைபெறவில்லை. எனவே, வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி 2வது முறையாக நிராகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை மீண்டும் நிராகரித்தார் ஆளுநர் appeared first on Dinakaran.

Tags : Governor ,Tamil Nadu government ,Silendra Babu ,TNPSC ,Chennai ,R. N. Ravi ,Tamil Government ,Sailendra Babu ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...