அகமதாபாத்: குஜராத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடக்கும் கர்பா நடனத்தின் போது 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் நவராத்திரியின் 9 நாட்களும் அம்மாநில நாட்டுப்புற நடனமான கர்பா நடனமாடி மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்காக பொது இடங்களில் கர்பா பாடல், நடனங்கள் நடத்தப்படும். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் இறந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் நேற்று முன்தினம் 24 வயது இளைஞரும், கபட்வன்ச் பகுதியில் 17 வயது சிறுவனும் கர்பா நடனத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதை விட அதிர்ச்சிகரமாக வதோதராவின் தபோய் பகுதியில் 13 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்துள்ளான். நவராத்திரியின் முதல் 6 நாட்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு இதய பாதிப்பு தொடர்பாக 521 அழைப்புகள் வந்துள்ளன. மூச்சுத் திணறல் தொடர்பாக 609 அழைப்புகள் வந்துள்ளன. இவை அனைத்து மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் வந்துள்ளன.
இந்த நேரத்தில் தான் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். எனவே, கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் விழிப்புடன் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கர்பா நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், விழா நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு உள்ளிட்ட அவசரகால ஏற்பாடுகளை செய்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நவராத்திரிக்கு முன்பாக, கர்பா நடன ஒத்திகையின் போது குஜராத்தில் 3 பேர் மாரடைப்பால் பலியானது குறிப்பிடத்தக்கது.
The post நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் பலி: குஜராத்தில் அதிர்ச்சி appeared first on Dinakaran.
