×

நாடு முழுவதும் ஓராண்டில் 188 போலீசார் பணியின்போது பலி: அமித்ஷா தகவல்

புதுடெல்லி; நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 188 போலீசார் பணியின் போது பலியாகி உள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள தேசிய காவல்துறை நினைவிடத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மரியாதை செய்தார். பின்னர் அவர் கூறுகையில்,’ சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த ஓராண்டில் 188 காவலர்கள் பணியின் போது உயிர் தியாகம் செய்துள்ளனர்.

அந்த குடும்பத்தினரின் தியாகத்தை நாடு என்றும் மறக்காது. நாட்டிற்கு சேவை செய்யும் அனைத்து பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கு கடினமான பணி உள்ளது. அது பகல் அல்லது இரவு, குளிர்காலம் அல்லது கோடை, பண்டிகை அல்லது வழக்கமான நாள், காவல்துறையினருக்கு தங்கள் குடும்பத்துடன் பண்டிகைகளைக் கொண்டாட வாய்ப்பு கிடைப்பதில்லை. காவலர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விலகி, தங்கள் துணிச்சல் மற்றும் தியாகத்தால் நாட்டைப் பாதுகாத்து வருகிறார்கள்.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து 36,250 காவலர்கள் தேசத்திற்காக உயிர்தியாகம் செய்துள்ளனர். காவலர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். தீவிரவாதத்துக்கு எதிரான சகிப்புத் தன்மை இல்லாத கொள்கையை கடைப்பிடிக்கும் மோடி அரசு கடுமையான சட்டங்களை இயற்றி உள்ளது. இதனால் வடகிழக்கு, ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், கிளர்ச்சி சம்பவங்கள் 65 சதவீதம் குறைந்துள்ளன’ என்று பேசினார்.

The post நாடு முழுவதும் ஓராண்டில் 188 போலீசார் பணியின்போது பலி: அமித்ஷா தகவல் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,New Delhi ,Union Home Minister ,
× RELATED ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து...