×

புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஆடுகள் வரத்து அதிகரித்து ₹21 லட்சத்திற்கு வர்த்தகம்

*களைகட்டிய ஒடுகத்தூர் வாரச்சந்தை

ஒடுகத்தூர் : புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஒடுகத்தூர் சந்தைக்கு நேற்று கொண்டுவரப்பட்ட ஆடுகள் ₹21 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின்போது திருவிழாவையொட்டி பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பதும், புரட்டாசி மாதங்களில் சில லட்சங்களுக்கு மட் டுமே விற்பனை நடப்பதும் வழக்கம்.

இந்நிலையில், தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்தே பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், கடந்த 3 வாரங்களாக ஒடுகத்தூர் சந்தையில் ஆடுகள் விற்பனை குறைந்தே காணப்பட்டது. எப்போதும் காலையில் தொடங்கும் சந்தை மதியம் 12 மணி வரை நடைபெறும். ஆனால், கடந்த வாரம் காலை 10 மணிக்கே சந்தை முடிந்து விட்டது. இதனால், மொத்தம் ₹8 லட்சத்திற்கே ஆடுகள் குறைந்த அளவு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், தற்போது புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டு சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், காலை முதலே விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.அதேபோல், வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கினர். இதனால், ₹21 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வர்த்தகமும் அதிகரித்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘புரட்டாசி மாதம் தொடங்கிய முதலே ஆடு விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதனால், விற்பனைக்காக கொண்டு வந்த ஆடுகளை பலர் ஏமாற்றத்துடன் திரும்பி கொண்டு சென்றனர். ஆனால், புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஆடுகள் ஏராளமான பகுதிகளில் இருந்து இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்ததாக’ தெரிவித்தனர்.

The post புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் ஆடுகள் வரத்து அதிகரித்து ₹21 லட்சத்திற்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Odugathur ,Goats ,Dinakaran ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...