×

கலவை அருகே அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியை கீழே தள்ளி 4 சவரன் தங்கதாலி பறித்த முகமூடி ஆசாமி

*டிஎஸ்பி நேரில் விசாரணை

கலவை : கலவை அருகே அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியை கீழே தள்ளி 4 சவரன் தங்கதாலியை முகமூடி நபர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிஎஸ்பி நேரில் விசாரணை நடத்தினார். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வேம்பி கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். அவரது மனைவி ரங்கநாயகி (76). ரங்கநாதன் மற்றும் ரங்கநாயகி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர். பின்னர், நேற்று அதிகாலை 2 மணியளவில் ரங்கநாயகி எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குச் சென்றுவிட்டு மீண்டும் அவரது அறைக்கு சென்றுள்ளார். அப்போது கணவர் ரங்கநாதன் அவரது அறையில் முகமூடி அணிந்த மர்ம நபர் வருவதை கண்டு கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் ரங்கநாயகியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். ஆனால் ரங்கநாயகி தாலி செயினை விடாமல் பிடித்துக் கொண்டார். ஆனால் அவரை கீழே தள்ளிவிட்டு மர்ம நபர் செயினை பறித்து விட்டு தப்பியோடினார். இதனால் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, கலவை போலீசில் ரங்கநாயகி புகார் செய்தார். அதன் பேரில் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பிரபு, கலவை இன்ஸ்பெக்டர் காண்டீபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சரவணமூர்த்தி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதில், பின்பக்க கதவின் தாழ்ப்பாழ், பூட்டை உடைத்துக் கொண்டு மர்ம நபர் உள்ளே வந்தது தெரிய வந்தது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து மூதாட்டியின் 4 சவரன் தங்கதாலி செயினை முகமூடி அணிந்த மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கலவை அருகே அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியை கீழே தள்ளி 4 சவரன் தங்கதாலி பறித்த முகமூடி ஆசாமி appeared first on Dinakaran.

Tags : Makkah ,
× RELATED பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை