×

கடைசியாக ஒரு செல்பி… போதையில் தற்கொலை செய்ய ரயில் முன்பு நின்ற நண்பர்கள்: டிரைவர் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினர்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே தண்டவாளத்தில் மதுபோதையில் ரயில் முன்பு நின்ற நண்பர்கள், டிரைவரின் சமார்த்தியத்தால் உயிர் தப்பினர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இளம்பிலாம் தோட்டம் பகுதியை சேர்ந்த 3 வாலிபர்கள் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இதில் ஒருவர் ஓட்டலிலும், மற்றொருவர் லாரியில் கிளீனராகவும் வேலை செய்கின்றனர். மற்றொரு நண்பர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊருக்கு வந்தவர்கள் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளை பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகில் மது அருந்தியுள்ளனர்.

போதை தலைக்கேறிய நிலையில், 3 பேரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக கொல்லத்தில் இருந்து நெல்லை நோக்கி டீசல் புல்லட் கூட்ஸ் ரயில் வந்தது. உடனே மூவரும் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்துள்ளனர். இன்ஜின் டிரைவர் முகம்மது ஜான், வாலிபர்கள் 3 பேர் நிற்பதை பார்த்து, ரயிலின் வேகத்தை சட்டென குறைத்துள்ளார். ரயில் அருகே வந்ததும் நண்பர்களில் 2 பேர் தண்டவாளத்தில் இருந்துவெளியே குதித்தனர்.

ஒருவர் மட்டும் அங்கேயே நின்றார். இதனையடுத்து அவரை பிடித்து மற்றொருவர் வெளியே இழுத்தார். அதற்குள் ரயில் அவர்கள் மீது லேசாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒருவருக்கு தலை மற்றும் கை, கால்களிலும், மற்றொருவருக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. 2 நண்பர்களும் உயிருக்கு போராடுவதை பார்த்து மற்றொரு நண்பர் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி, வாலிபர்களை எச்சரித்துள்ளனர்.

The post கடைசியாக ஒரு செல்பி… போதையில் தற்கொலை செய்ய ரயில் முன்பு நின்ற நண்பர்கள்: டிரைவர் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : MARTHANDAM ,NEAR MARTHAM ,Kumari District ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...