×

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 3,300 பேர் சிக்கினர்: ₹22.7 லட்சம் அபராதம்

சென்னை, அக்.20: ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செல்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பிடித்து அபராதம் விதித்தாலும், இதுபோல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்பில், 31 டிக்கெட் பரிசோதனை குழுவினர் மூலம் ஒரே நாளில் தீவிர சோதனை, சென்னை சென்ட்ரல், பெரம்பூர், ஈரோடு, கோவை, எர்ணாகுளம் ஆகிய ரயில் நிலையங்களில் நடத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 300 பேர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ₹22.7 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி வரை ₹57.48 கோடி அபராத தொகை வசூலாகி உள்ளது. முறையற்ற டிக்கெட்டுகள், லக்கேஜ் கட்டணம் செலுத்தாதது ஆகியவையும் அடங்கும். அபராத வசூலில் சென்னை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ₹21.82 கோடி வசூலாகி உள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் ₹8.72 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் ₹8.32 கோடியும் வசூலாகி உள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் அனைவரும் வேண்டுமென்றே டிக்கெட் எடுக்காமல் வருபவர்கள் அல்ல. அவசர அவசரமாக ரயிலை பிடிக்க ஓடி வருபவர்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களை பிடிப்பதற்காக அவசர கதியில் வருபவர்களும் உண்டு. மின்சார ரயில்களை பொறுத்தவரை டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களில் மாணவர்கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 3,300 பேர் சிக்கினர்: ₹22.7 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,OC ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…