×

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் கொள்ளை

புவனகிரி, அக். 20: புவனகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மேல்புவனகிரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் முகமதுபெரோஸ். இவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக புதுச்சேரி சென்றுள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக இவரது வீடு பூட்டி இருந்தது.இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை இவரது வீட்டின் கதவு லேசாக திறந்து இருப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் இதுகுறித்து முகமது பெரோசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 20 பவுன், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும்.இது குறித்து முகமது பெரோஸ் கொடுத்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார், தடயவியல் நிபுணர்களை கொண்டு அவரது வீட்டில் கைரேகை உள்ளிட்ட முக்கிய தடயங்களையும் சேகரித்தனர். ஆளில்லாத நேரத்தில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Bhuvangiri ,Bhubanagiri ,Dinakaran ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...