×

கடந்த 15 நாட்களாக புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 367 வழக்குகள் பதிவு: 380 நபர்கள் கைது

சென்னை: கடந்த 15 நாட்கள் குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 380 நபர்கள் கைது செய்து 6,392 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், பணம் ரூ.23,40,390 மற்றும் 8 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

குட்கா, மாவா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் 23.07.2021 அன்று சென்னை பெருநகர காவல்துறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுக்கு எதிரான (DABToP) என்ற திட்டத்தை தொடங்கியது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP – Drive Against Banned Tobacco Products) என்ற சிறப்பு சோதனை மேற்கொண்டு, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல், ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான தீவிர சிறப்பு சோதனைகள் மற்றும் வாகன சோதனை மற்றும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குடோன்களில் தணிக்கைகள் மேற்கொண்டு, கடந்த 01.10.2023 முதல் 15.10.2023 வரையிலான 15 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 380 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.59.3 இலட்சம் மதிப்புள்ள 6,392 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், பணம் ரூ.23,40,390/- 3 இருசக்கர வாகனங்கள், 1 ஆட்டோ மற்றம் 4 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், காவல்துறையினரால் அளிக்கப்பட்ட தகவலின்பேரில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துதல், விற்பனை செய்தல், பதுக்குதல் போன்வைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post கடந்த 15 நாட்களாக புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 367 வழக்குகள் பதிவு: 380 நபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gutka ,Mawa ,
× RELATED குட்கா, மாவா புகையிலை பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனை: 165 நபர்கள் கைது