ஆவடி: திருமுல்லைவாயல் கோயில் குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் 1500 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த மாசிலா மணீஸ்வரர் கோயில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலே மிகவும் வரலாற்று சிறப்புடைய பிரசித்தி பெற்ற சிவன் கோயில் இது. இங்குள்ள குளத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கிறது. இது, பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அருகே வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்படும் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமாவாசை அன்று கோயில் நிர்வாகம் சார்பாக குளத்தை சீரமைக்கும் பணி நடந்ததாகவும், அதன்பிறகே நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, குளத்தில் ஏதாவது நச்சுப்பொருள் கலந்து இருக்கலாமா என சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. செத்து மிதக்கும் மீன்களால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதை கோயில் நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோயில் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
The post கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: பக்தர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.