×

எட்டயபுரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்; ஒரு இளம்பெண்ணுக்கு இருவர் போட்டி ராணுவ வீரர் சரமாரி வெட்டிக் கொலை

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே நள்ளிரவில் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வெம்பூரைச் சேர்ந்த வேலமுத்து-பாக்கியலட்சுமி தம்பதி மகன் வேல்முருகன் (24). ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்தார். ஒரு மாத விடுமுறையில் வேல்முருகன் ஊருக்கு வந்தார். இவர் வழக்கமாக வீட்டின் மொட்டை மாடியில் இரவில் தூங்குவது வழக்கம். இதுபோல் நேற்றிரவும் மொட்டை மாடியில் தூங்குவதற்காக சென்றார். வீட்டினுள் தந்தை, தாய், தம்பி, தங்கை ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வேல்முருகன் மாடியிலிருந்து எழுந்து வராததால் அவரைப் பார்க்க தாய் பாக்கியலட்சுமி சென்றார். அங்கு ரத்த வெள்ளத்தில் வேல்முருகன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட வேல்முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெம்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராணுவ வீரர் வேல்முருகனிடம் முதலில் பழகியுள்ளார். அவர் ராணுவத்தில் வேலை கிடைத்து ஜம்மு-காஷ்மீருக்கு சென்றதும் அதே ஊரைச் சேர்ந்த மாரிச்சாமி(30) என்பவரிடம் பழகியுள்ளார். இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வேல்முருகன் ஊருக்கு வந்ததும், அவரிடம் நெருங்கிப் பழகினார். இதைப் பார்த்த மாரிச்சாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வேல்முருகனுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று கண்டித்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் அதை அலட்சியம் செய்தார்.

தொடர்ந்து வேல்முருகனிடம் போனிலும், நேரிலும் பேசியுள்ளார். இது மாரிச்சாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரராக இருப்பதால், நம்மை இளம்பெண் ஒதுக்கிவிட்டு வேல்முருகனை திருமணம் செய்துகொள்வாரோ என்று நினைத்தார். இதனால் அதை தடுக்க வேண்டும் என்றால், வேல்முருகன் உயிருடன் இருக்கக் கூடாது என்று அவரை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி மொட்டைமாடியில் வேல்முருகன் இரவில் தனியாக படுத்திருப்பதை நோட்டமிட்ட மாரிச்சாமி, நேற்று நள்ளிரவில் மொட்டை மாடிக்கு சென்று, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி தீர்த்துக் கட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மாரிச்சாமியைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

The post எட்டயபுரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்; ஒரு இளம்பெண்ணுக்கு இருவர் போட்டி ராணுவ வீரர் சரமாரி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,
× RELATED எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை,...