சென்னை: சென்னையில் நடந்த திமுக மகளிர் உரிமை மாநாட்டில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: பெண்களுக்கு இலவச பஸ் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை, கலைஞர் உரிமைத்தொகை வழங்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தில் 11 பெண் மேயர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசில் ‘நாரி சக்தி’ என்று பெண்களின் சக்தி குறித்து பிரதமர் மோடி பொய் புரட்டுகளை சொல்லிக்கொண்டு இருப்பார். மகளிர் மசோதாவை கொண்டுவந்துவிட்டோம் என்று மார்த்தட்டி கொள்கிறது ஒன்றிய பாஜ அரசு. ஆனால் 50 ஆண்டுகள் ஆனாலும் அந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வரமுடியாது. தேர்தலுக்காக பெண்களை ஏமாற்ற துடிக்கிறார்கள்.
ஜனாதிபதி முதல் சாமானிய பெண்கள் வரை யாராக இருக்கட்டும் யாருக்கும் பாதுகாப்பில்லை, நியாயமில்லை என்ற நிலையை தான் பாஜ ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. பெண்கள் தரப்பில் இருந்து 50 சதவீத வாக்குகள் வருகிறது. ஆனால் அரசின் முக்கிய முடிவுகள் எதிலும் பெண்களின் கருத்து கேட்கப்படுவது கிடையாது. பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள். நாங்கள் யாசகம் கேட்கவில்லை. எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று நாட்டில் உள்ள பெண்கள் நிமிர்ந்து நின்று போராடக்கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். நாட்டில் உள்ள பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்குமான நீதியை பெறுவோம் என்று பேசினார்.
The post பெண்கள் யாசகம் கேட்கவில்லை உரிமைகளுக்காக போராடுகிறோம்: கனிமொழி எம்.பி. பேச்சு appeared first on Dinakaran.