×

தெலங்கானாவில் ₹4 லட்சம் பணத்தகராறில் பயங்கரம் மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போலீஸ்காரர்

*உறவினர்கள் கற்களால் தாக்கியதில் படுகாயம்

திருமலை : தெலங்கானாவில் ₹4 லட்சம் பணத்தகராறில் மாமியாரை போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம், ராமகுண்டம் காவல் ஆணையகத்தில் மஞ்சிரியாலாவை சேர்ந்த பிரசாத் என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டல சிங்காரம் கிராமத்தை சேர்ந்த கமலம்மா என்பவரின் மகளை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கமலம்மா மருமகன் பிரசாத்திற்கு ₹4 லட்சம் பணம் தர வேண்டுமாம். இந்த பணத்தை எப்போது கேட்டாலும் கமலம்மா அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மஞ்சிரியாலாவில் இருந்து நேற்று முன்தினம் மனைவியுடன் குண்டல சிங்காரம் வந்த பிரசாத், தனது மாமியார் கமலம்மாவிடம் பணம் குறித்து கேட்டு கொண்டிருந்தார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ​​தகாத வார்த்தைகளால் திட்டியபடி திடீரென தான் கொண்டுவந்த துப்பாக்கியால் கமலம்மாவின் மார்பில் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கேயே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கான்ஸ்டபிள் பிரசாத்தை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த கமலம்மாவின் குடும்பத்தினர் கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பிரசாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த பிரசாத்தை மீட்டு வாரங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் பிரசாத் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தெலங்கானாவில் ₹4 லட்சம் பணத்தகராறில் பயங்கரம் மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற போலீஸ்காரர் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Payangaram ,Tirumala ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து