தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசைப்படகுகள் மூலம் 6 நாட்களும் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலை நம்பி 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். விசைப்படகுகள் மூலம் 6 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு சென்று வந்த நிலையில் திடீரென அதை 3 நாட்களாக விசைப்படகு உரிமையாளர்கள் குறைத்துள்ளனர். மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தாலேயே இந்த முடிவு எடுத்து இருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள் 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகம் முன்பு கூடிய அவர்கள் உரிமையாளர்களின் இந்த முடிவால் தங்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாகும் நிலைக்கு சென்றுவிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். விசைப்படகுகளை 6 நாட்களும் கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் இதில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். விசைப்படகு தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராடியதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
The post கடலுக்கு செல்ல ஆறு நாட்களும் அனுமதிக்க வலியுறுத்தல்: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் குடும்பத்தினருடன் போராட்டம் appeared first on Dinakaran.
