×

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் எப்போது? ஒன்றிய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022 பிப்ரவரி 28ம் தேதியிலிருந்து காலியாக உள்ளதால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனக் கூறி வழக்கறிஞர் சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு கடந்த 2022 டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டதாகவும், கடந்த மார்ச் மாதம் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டதாகவும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று பதிலளித்தார். இதையடுத்து, ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட அத்தனை உறுப்பினர்களும் எப்போது நியமிக்கப்படுவர் என்று விளக்கமளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் எப்போது? ஒன்றிய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : National Backward Commission ,High Court ,Union Government ,Chennai ,National Commission for Backward Welfare ,National Commission for Backward Persons ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்குகளில்...