×

சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!!

சென்னை : சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ எனும் மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டத்தைத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. சர்வதேச தரத்தில் அமையவுள்ள இந்த விளையாட்டு நகரத்தில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன. மேலும், இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சர்வதேச தரத்தில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்காக சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் 105 ஏக்கர் கொண்ட காலி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது.

இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கண்காணிப்புப் பொறியாளர், கட்டுமானப்பிரிவு, வட்டம்-1 கோயம்பேடு, சென்னை-107, அவர்களால் சென்னை மாவட்டம் செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கலந்தலோசகர் நிறுவனத்தை பணியமர்த்த தகுதியான நிறுவனங்களிடமிருந்து மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் இரு உறை முறையில் வரவேற்கப்படுகின்றன.

மின்னனு ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை எண் 19/2023-24, நாள். 10.10.2023. ஒப்பந்தப்புள்ளிகள் இணைய வழி மூலமாக பெறப்படும் கடைசி நாள் மற்றும் நேரம் – 14.11.2023 அன்று பிற்பகல் 3.00 மணி வரை. ஒப்பந்தப்புள்ளிகளை 13.10.2023 முதல் 14.11.2023 பிற்பகல் 3.00 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.மேலும் விவரங்களுக்கு http://tntenders.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பது தொடர்பாக டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Semmancheri, Chennai ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...