×

அச்சிறுப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ₹4.50 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

மதுராந்தகம், அக்.12: அச்சிறுப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ₹4.50 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக அச்சிறுப்பாக்கம் அருகே பள்ளிப்பேட்டை கிராமத்தில் சென்னை – திருச்ச தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 1.51 ஏக்கர் அளவு கொண்ட நன்செய் நிலம் மற்றும் 544 சதுர அடி அளவு கொண்ட கட்டிடம் ஆகியவை தனியார் ஒருவரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் கோயிலுக்கு சாதகமாக முடிவு வெளியான நிலையில் நேற்று குறிப்பிட்ட நிலம் மற்றும் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டு கோயில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது, இந்து சமய அறநிலையத்துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லஷ்மிகாந்தன், கோயில் நிலங்கள் வட்டாட்சியர் தங்கராஜ், செயல் அலுவலர் மேகவண்ணன், சரக ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர். மீட்கப்பட்ட நிலம் நில அளவையர்களை கொண்டு அளவீடு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அளவை கற்களும் நடப்பட்டன. மேலும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ₹4.50 கோடி. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசு கோயில் நிலங்களை மீட்பதில் உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளும் கடுமையாக இருக்கும். எனவே, கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்’ என்றார்.

The post அச்சிறுப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ₹4.50 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Achiruppakkum ,Madhurandhakam ,Achiruppakkam ,Chengalpattu District ,Madurandakam… ,
× RELATED வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில்...