×

கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர்களின் கூட்டணியால் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ரூ.4.81 கோடி அளவில் அதிகப்படியான செலவு; கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர்களின் கூட்டணியால் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேட்டால் ரூ.4.81 கோடி அளவில் அதிகப்படியான செலவு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணக்கு தணிக்கை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் சத்துணவு திட்டத்தின் பயணாளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இலவச சீருடை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் ஆகியோரோல் இணைத்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் தகுதியுடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தைத்த சீருடைகளை வழங்குவது கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் பொறுப்பு. நெசவாளர் கூட்டுறவு மூலம் நூல் கொள்முதல், துணி உற்பத்தி செய்யப்பட்டு, மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகள் தைக்கப்பட்டு பெறுவது கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையரின் பொறுப்பு. இந்நிலையில் டிசம்பர் 2020ம் ஆண்டு 3,011 மெட்ரிக் டன் அளவிலான பல்வேறு நூல் வகைகளை டெண்டர் மூலமாகவும், மேலும் 2,876.08 மெட்ரிக் டன் பாலியஸ்டர் பருத்தி நூலை கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து டெண்டர் இல்லாமல் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

டிசம்பர் 2020ல் நூல் உற்பத்தியாளர்கள், நூல் சாயமிடுபவர்கள் மற்றும் நூல் வர்த்தகர்களிடமிருந்து திறந்த டெண்டர் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. நூல் வியாபாரிகளிடம் இருந்து மூன்றும் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்ட நிலையில், நூல் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி எதும் பெறப்படவில்லை. டெண்டர் ஏற்புக்குழு கடந்த 2021ம் ஆண்டு ஜன.11ம் தேதியன்று தொழில்நுட்ப ஒப்பந்தபுள்ளிகளைத் திறந்தது. தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகளின் மதிப்பீட்டிற்குப் பிறகு, மூன்று ஒப்பந்ததாரர்கள் தகுதியானவர்கள் என்று டெண்டர் ஏற்புக்குழு முடிவு செய்தது.

இதில் 2019-20 மற்றும் 2020-21ம் ஆண்டுகளில், கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் மூலம் நூல் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் அதே சில ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றிருந்தனர், மேலும் கொள்முதல் ஆணைகள் அதே ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டன. வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும்வகையில் தமிழக அரசின் மின்கொள்முதல் அமைப்புமுறை டெண்டர் விவரப்பட்டியலை இலவசமாக பதிவிறக்கம் செய்து, இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உதவுகிறது. மூன்று ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையிலும், கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையரகம் நாடு முழுவதும் உள்ள வணிகர்களை ஈர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் பின்பற்றவில்லை.

வெளிப்படைத்தன்மையை டெண்டர் செயல்முறையை பின்பற்றத் தவறியது ஒப்பந்ததாரர்களின் வணிக கூட்டமைப்பை எளிதாக்கியது. மேற்குறிப்பிடப்பட்ட தகவல்களிலிருந்து, ஒப்பந்ததாரர்களால் கூட்டணி அமைக்கப்பட்டு டெண்டர் செயல்முறை மோசடி செய்யப்பட்டது தணிக்கையில் கண்டறியப்பட்டது. ஒப்பந்ததாரர்களுக்கிடையேபான மூன்று கூட்டமைப்பு ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இத்தகைய சுயலாபக் கூட்டணியைத் தடுக்க, கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரே நபர் வெவ்வேறு ஒப்பந்ததாரர்களின் பிரதிநிதியாக இருப்பது, இரண்டு அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு இடையேயான கூட்டமைப்பை குறிப்பதாக தணிக்கை அதற்கு மீண்டும் வலியுறுத்துகிறது. இது மொத்த ஒப்பந்த செயல்முறையின் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தன்மையையும் சீர்குலைத்து, திறந்த மற்றும் டெண்டர் போட்டி முறையின் நோக்கத்தையே வலுவிழக்க செய்கிறது. சுயலாபக் கூட்டமைப்பு, கூட்டு ஏல முறை, ஒப்பந்தபுள்ளி செயல்முறை மோசடியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்களை டெண்டர்களில் பங்கேற்பதில் இருந்து கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் தடை செய்திருக்க வேண்டும்.

மூன்று ஒப்பந்ததாரர்களிடையே ஒப்பந்தப்புள்ளி செயல்முறை, ஏல முறைகேடு மற்றும் சுயலாபக் கூட்டணியைக் கவனிக்கவும் தடுக்கவும் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் தவறியதாலும், திட்டத்தின் அமலாக்கத்தை தொடக்க கல்வி இயக்குநர் போதிய அளவில் கண்காணிக்கத் தவறியதாலும், செய்த செலவின் சரித்தன்மையை சரிபார்க்கத் தவறியதாலும், ரூ.4.81 கோடி தவிர்த்திருக்கக்கூடிய அதிகப்படியான செலவினம் ஏற்பட்டது.

மேலும்பள்ளிக் கல்வி ஆணையர், தொடக்கக் கல்வி இயக்குநர் இத்திட்டத்தை திறம்படக் கண்காணிக்கத் தவறியதால், வங்கிக் கணக்கில் செலவழிக்கப்படாத ரு.33.23 கோடி நிலுவைகள் முடக்கப்பட்டன. பொதுக் கருவூலத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திய சுயலாபக் கூட்டணி மூலம் ஒப்பந்தப்புள்ளி செயல்முறை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். மின்கொள்முதல் முறை கட்டாயமாக்கப்பட வேண்டும் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையரின் வங்கியில் அரசு பணம் செலுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர்களின் கூட்டணியால் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில் முறைகேடு: ரூ.4.81 கோடி அளவில் அதிகப்படியான செலவு; கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Audit ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்