×

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 30 ஆண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது

*13 ஊராட்சிகளுக்கும் கிடைக்கும்

*மேயர் பெருமிதம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாநகர பகுதிகளில் இனி குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில், திருமானூர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு, தஞ்சாவூர் மாநகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக இந்நீரேற்று நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான திருமானூர் நீரேற்று நிலையத்தில் தொடக்கத்தில் ஒரு நீர் உறிஞ்சும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இதன் மூலம் 23 எம்எல்டி உறிஞ்சப்பட்டு குழாய் மூலம் தஞ்சாவூருக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர தலா 18 எம்எல்டி நீர் உறிஞ்சும் நிலையங்கள் இரண்டு அமைக்கப்பட்டு, இதன் பணிகள் இன்னும் இரு மாதங்களில் நிறைவு பெறவுள்ளது.

இது தவிர ஏற்கனவே உள்ள 23 எம்எல்டியும் சேர்த்தால், சுமார் 60 எம்எல்டி அளவுக்கு தண்ணீர் தஞ்சாவூர் மாநகருக்கு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. தஞ்சாவூரின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 30 எம்எல்டி. அளவுக்கு தஞ்சாவூருக்கு தண்ணீர் வந்தாலே போதுமானது. தற்போது இரண்டு மடங்கு அளவுக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்னும் 13 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

அவ்வாறு இணைத்தாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இந்த பணிகளை மாநகராட்சிக்கு பெருமை சேர்க்கும் அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இத்துறை அமைச்சரின் ஒப்புதலோடு செய்து வருகிறோம். இதன் திட்ட மதிப்பீடு ரூ.73 கோடி. இத்திட்டத்தால் குறைந்த பட்சம் 30 ஆண்டுகளுக்கு மிகாமல் குடிநீர் தட்டுப்பாடு என்பது இருக்காது. இன்னும் 10 மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற்றவுடன் 24 மணி நேரமும் எவ்வித தடையும் இன்றி மாநகரில் பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் (பொ) ராஜசேகரன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒருநாள் தேவை 135 லிட்டர்

தஞ்சை மாநகர் பகுதிக்கு திருமானூர் நீரேற்று நிலையத்திலிருந்து தற்போது 15 எம்எல்டி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகரில் 256 இடங்களில் ராட்சத போர்வெல் அமைக்கப்பட்டு அதன் மூலம் ஒரு நாளைக்கு 7.50 எம்எல்டி நீர் வருகிறது. மாநகரின் மொத்த மக்கள் தொகை தற்போதைய நிலவரப்படி சுமார் 2.60 லட்சம். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 135 லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது தேவையையும் மிஞ்சி ஒரு நபருக்கு சுமார் 200 லிட்டருக்கு மேல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் தஞ்சாவூர் மாநகருடன் 13 ஊராட்சிகள் இணைய உள்ளதை கருத்தில் கொண்டும் 18 எம்எல்டி நீர் வழங்குவதற்காக திருமானூர் நீரேற்று நிலையத்திலிருந்து இரண்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு அதில் ஒன்று நிறைவடைந்துள்ளது. அதில் தற்போது 12 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 18 எம்எல்டி திட்ட பணிகள் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாநகருக்கு மொத்தம் சுமார் 50 எம்எல்டி நீர் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 30 ஆண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது appeared first on Dinakaran.

Tags : Thanjavur Municipal Corporation ,Mayor ,Perumitham Thanjavur ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே சேதமான பாதாள சாக்கடை மூடி சீரமைப்பு