×

கண்டாச்சிபுரம் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுனர், கிளீனர்

கண்டாச்சிபுரம், அக். 11: விழுப்புரம் அடுத்த காணை கிராமத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து லாரியில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு முகையூர், கண்டாச்சிபுரம் வழியாக செங்கம் பகுதிக்கு லாரி சென்றது. இந்த லாரியில் காணை கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயச்சந்திரன் (44) ஓட்டுநராகவும், அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (42) கிளினராகவும் சென்றனர். இந்நிலையில் நேற்று காலை லாரி கண்டாச்சிபுரம்-முகையூர் பிரதான சாலையில் பம்பகரை அரசு மதுபானக்கடை அருகே வந்த போது எதிரில் வேறொரு நான்கு சக்கர வாகனம் வந்ததால் லாரியை சாலையோரம் ஒதுக்கியபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஜெயச்சந்திரனுக்கு லேசான காயமும், ஓட்டுநர் கிருஷ்ணராஜ்க்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் ஏராளமான சிமெண்ட் மூட்டைகள் கீழே கொட்டியது. இதுகுறித்து தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கண்டாச்சிபுரம் அருகே சிமெண்ட் மூட்டை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஓட்டுனர், கிளீனர் appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Kannai village ,Villupuram, Mukaiyur ,Dinakaran ,
× RELATED ரூ32,000 லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர்கள் கைது