×

மின்ஊழியர் வீட்டில் கதவு உடைத்து 5 சவரன் நகை, ₹20 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை செங்கம் நகரில் நள்ளிரவு துணிகரம்

செங்கம், அக்.11: செங்கம் நகரில் மின்ஊழியர் வீட்டில் 5 சவரன் நகைகள், ₹20 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன் பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். செய்யாறு மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா(46). வேைல காரணமாக வெங்கடேசன் செய்யாறில் உள்ள நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அமுதா உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதேபோல், அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 5 சவரன் நகைகள், வெள்ளி கொலுசு, வெள்ளி பொருட்கள், ₹20 ஆயிரம் ஆகியவற்றை நள்ளிரவு மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா உடனே கணவர் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் செங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டில் பெண் தனியாக இருந்த நிலையில் மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மின்ஊழியர் வீட்டில் கதவு உடைத்து 5 சவரன் நகை, ₹20 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை செங்கம் நகரில் நள்ளிரவு துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Sengam ,
× RELATED கலெக்டர் அலுவலகம் முன் முதியவர்...