- சிஐடி போலீஸ்
- சந்திரபாபு நாயுடு
- திருமலா
- ஆந்திரப் பிரதேசம்
- ஆந்திரா
- முதல் அமைச்சர்
- தெலுங்கு தேசம் கட்சி
திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமராவதியை தலைநகராக அறிவித்த சந்திரபாபு நாயுடு தலைநகர வளர்ச்சி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் அமராவதி நகரில் உள்வட்ட சாலை அமைக்கும் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், அந்த முறைகேடுகளில் சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ்க்கு தொடர்பு இருப்பதாகவும் ஆந்திர சிஐடி போலீசார் விசாரணைக்கு குண்டூரில் உள்ள சிஐடி தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் விசாரணையில் ஆஜர் ஆவதற்காக நாராலோகேஷ் குண்டூரில் உள்ள சிஐடி தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை 11 மணிக்கு சென்றார். அவரிடம் சுமார் ஆறரை மணி நேரம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு பிறகு வெளியே வந்த நாராலோகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: அமராவதி தலைநகரில் உள்வட்ட சாலை அமைக்க இருந்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக விசாரணைக்கு அழைத்தனர். அங்கு சாலையே அமைக்கப்படவில்லை. அவ்வாறு உள்ள நிலையில் இல்லாத சாலைக்கு ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். இன்று நாரா லோகேஷ் விசாரணைக்காக ஆஜராகிறார்.
The post சாலை பணியில் முறைகேடு சந்திரபாபு நாயுடு மகனிடம் சிஐடி போலீஸ் 6 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.