×

குரூப்-4 இறுதி விடைத்தாள் வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2022 மார்ச் 30ம் தேதி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. மொத்தம் 7,301 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு 2022 ஜூலை 24ல் நடைபெற்றது. சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், குரூப்-4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு நாங்கள் இருவரும் விண்ணப்பித்து தேர்வு எழுதினோம். இதற்கான முடிவுகள் கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளது. தற்போது குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. குரூப்-4 தேர்வில் விடைத்தாள் (ஓஎம்ஆர்) மோசடியும், குழப்பமும் நடைபெற்றுள்ளது. எனவே, எங்களுடைய வினாத்தாளை (ஓஎம்ஆர்) எங்களுக்கு வழங்க வேண்டும்.

அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குரூப்-4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து உடனடியாக குரூப்-4 தேர்வுக்கான இறுதி செய்யப்பட்ட விடைத்தாள் வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை நாளை (அக்.11) சமர்பிக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றியது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை நாளை ஒத்தி வைத்தார்.

The post குரூப்-4 இறுதி விடைத்தாள் வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt Branch ,Madurai ,Kanmani ,Geetha ,iCourt Madurai ,iCourt ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...