×

பட்டப்பகலில் துணிகரம் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: காரில் தப்பி சென்றவர்களுக்கு வலை

 

பண்ருட்டி, அக். 9: பண்ருட்டியை அடுத்த ஏ.ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (69). இவர் தனது மனைவி ஆனந்தியை அழைத்து கொண்டு நேற்று பகல் 12 மணி அளவில் கடலூருக்கு சென்றுவிட்டு, 2.45 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் சிகப்பு நிற கார் ஒன்று நின்று கொண்டு ஹாரன் அடித்துக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் வீட்டிற்குள் செல்லும்போது வீட்டின் முன்பக்க தாழ்பாள் உடைக்கப்பட்டு, உள்ளிருந்து ஒருவர் பின்பக்க தோட்டத்து கதவு பக்கமாக வெளியே ஓடி காரில் ஏறி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் ரூ.70 ஆயிரம், தோடு, மூக்குத்தி, மாட்டல் போன்ற சில்லறை நகைகள் சுமார் மூன்று பவுன் நகைகளையும் மர்ம ஆசாமி திருடி கொண்டு சென்றது தெரிய வந்தது. இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரசன்னா, தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து காரில் வந்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பட்டப்பகலில் துணிகரம் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: காரில் தப்பி சென்றவர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Panruti ,Ramalingam ,A. Andipalayam village ,Anandi ,
× RELATED கொத்தனார் மீது தாக்குதல்