×

சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை சிஎம்டிஏ, கும்டா கையகப்படுத்தும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை சிஎம்டிஏ மற்றும் கும்டா கையகப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை தெற்கு ரயில்வேயிடம் இருந்து கையகப்படுத்தி ரயில் சேவையை மேம்படுத்தி இயக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக வணிக திட்ட அறிக்கையை தயார் செய்ய ஆலோசகரை நியமிக்க சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே மயிலாப்பூர், மந்தைவெளி, பசுமைவழிச் சாலை, கோட்டூர்புரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிளுக்கும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, ஆகிய உள்ளிட்ட இடங்களை இணைக்கிறது.

சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் ரயில் இயக்கம் முதல் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் கையகப்படுத்தி மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டது. இந்த ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லை என்றும், ரயில் நிலையங்கள் சுகாதாரமில்லாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர், இந்த ரயில் சேவையை தமிழக அரசு எடுத்துக் கொண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் போல் மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலில் முடிவு செய்த போது பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தி மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் என கூறப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கூடுதலாக பணிகள் இருப்பதால தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சிஎம்டிஏ), சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) இணைந்து கையகப்படுத்தி பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டத்தை தொடங்கும் போது மெட்ரோ ரயில் நிறுவனம் நிர்வகிக்கும் என திட்டமிடப்பட்டது. ஆனால் மெட்ரோ நிறுவனம் சென்னையில் 2ம் கட்ட பணிகள், மற்ற நகரங்களுக்கான சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரித்தல் போன்ற சில திட்டங்களால் அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளதால் திட்டம் மாற்றப்பட்டது. தற்போதைய நிலையில் கும்டா மற்றும் சிஎம்டிஏ செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு பணிகளை மேற்கொள்ளும். ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சூழ்நிலையைப் பொறுத்து மெட்ரோ நிறுவனம் பொறுப்பேற்கலாம்.
எம்ஆர்டிஎஸ்-ஐ கையகப்படுத்துவதற்கான சொத்து அறிக்கை மற்றும் வணிகத் திட்டத்தைத் தயாரிக்க ஒரு ஆலோசகரை கும்டா இந்த மாத இறுதிக்குள் நியமிக்கும். ஜனவரிக்குள் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இந்தச் சொத்து அறிக்கை மற்றும் வணிகத் திட்டமானது, அடுத்த பத்தாண்டுக்கான திட்டமிடப்பட்ட பணப்புழக்கம், மூலதனச் செலவுத் தேவை, பயணிகளின் போக்குவரத்து மற்றும் பிற அம்சங்களைக் கொண்டிருக்கும்.

மேலும் புதிய குளிரூட்டப்பட்ட பெட்டிகளை வாங்கவும், குளிரூட்டப்பட்ட மற்றும் குளிரூட்டப்படாத பெட்டிகளுடன் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தைப் பெறும் வகையில் நிலையங்களை மேம்படுத்துவதே முதன்மை நோக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை சிஎம்டிஏ, கும்டா கையகப்படுத்தும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : CMDA ,Chennai Coast ,Chennai ,Kumda ,Velachery ,CMTA ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது..!!