ஊத்துக்கோட்டை, அக். 8: ஊத்துக்கோட்டையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையொட்டி, ஸ்ரீ கிருஷ்ணர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி ரெட்டி தெருவில் ராதா ருக்குமணி – சமேத ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
காலை 11 மணியளவில் கோயில் வளாகத்தில் இருந்து ராதா ருக்குமணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் படத்தை டிராக்டரில் வைத்து திருவீதி உலா வந்தது. இந்த ஊர்வலம் ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு, நேரு பஜார், திருவள்ளூர் சாலை, அண்ணா நகர், நாகலாபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோயிலை அடைந்தது. முன்னதாக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புளியோதரை, பொங்கல் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊத்துக்கோட்டை திருமலை – திருப்பதி பாத யாத்திரை குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
The post ஊத்துக்கோட்டை ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் புரட்டாசி சிறப்பு அபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.