×

ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல்

உடன்குடி: கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ். இவரது மனைவி ரதி (32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் ஆகிய மகன்களும் உள்ளனர். குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு மாலை போடுவதற்காக கடந்த 28ம்தேதி முத்துராஜ், ரதி, ஒன்றரை வயது மகன் ஸ்ரீஹரிஷ் ஆகியோர் வந்தனர். முன்னதாக திருச்செந்தூர் கோயிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய நினைத்து, அங்குள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெண், ரதியிடம் ‘‘நானும் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு மாலை போடுவதற்காக வந்துள்ளேன். நான் கடற்கரைக்கு துணி வைக்க செல்கிறேன். நீயும் வருகிறாயா? என ரதியிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து ரதி, குழந்தையையும், கணவரையும் அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு அந்தப் பெண்ணுடன் சென்றுள்ளார். அப்போது முத்துராஜ் சோப்பு வாங்கச் செல்வதாக கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் துணி துவைப்பது போல் பாவனை செய்தார். சிறிது நேரத்தில் ஸ்ரீஹரிசுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பதாகக் கூறிவிட்டு, அவனை மட்டும் அழைத்து செல்வதுபோல் கடத்தி சென்றுவிட்டார். புகாரின்பேரில் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் குழந்தையை கடத்திய அந்த பெண் டூவிலரில் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவருடன் செல்வது பதிவாகி இருந்தது. அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஐஸ்கிரீம் கொடுத்து குழந்தை கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Udankudi ,Muthuraj ,Manwalapuram Amman Temple Street ,Puttalam, Kanniyakumari District ,
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா