×

கொலை, ஆள் கடத்தல் என 48 வழக்குகளில் தொடர்பு பிரபல ரவுடி படப்பை குணா பாஜவில் இணைந்தார்: தொண்டர்கள் அதிர்ச்சி

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் (42). இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 48 வழக்குளில் 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும்.

இந்நிலையில் அப்போதைய காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிறையில் இருந்த படப்பை குணா ஜாமீனில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியே வந்தார். வெளியே வந்தவுடன் அவர் பாஜவில் இணைய போவதாக தகவல் வெளியானது. அதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பாஜ கூட்டம் ஒன்றில் தன்னை பாஜவில் இணைத்துக்கொள்வதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பிரபல ரவுடி படப்பை குணா தற்போது பாஜவில் இணைந்துள்ளார். அவருக்கு பாஜவில் மாவட்ட அளவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட பாஜ தலைவர் கே.எஸ்.பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு: பாஜ தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனின் வழிகாட்டுதலின்படியும், மாநில செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் ஒப்புதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர், மாநில ஓபிசி அணி தலைவர் சாய் சுரேஷ் ஆலோசனைபடியும் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக படப்பை குணா (எ)குணசேகரன் நியமிக்கப்படுகிறார். புதிதாக பொறுப்பேற்கும் மாவட்ட ஓபிசி அணி தலைவர் ஜி.டி.என்.குணா (எ) குணசேகரன் பணி சிறக்க வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குணாவின் மனைவி எல்லம்மாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். எல்லம்மாள் கடந்த 2022 ஜனவரி மாதம் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜவில் அடுத்தடுத்து ரவுடிகள் இணைவதும், அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதும் உண்மையான பாஜவினர், தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜ ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கட்சியாக மாறி வருகிறதா என்ற கேள்வியும் தற்போது தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

The post கொலை, ஆள் கடத்தல் என 48 வழக்குகளில் தொடர்பு பிரபல ரவுடி படப்பை குணா பாஜவில் இணைந்தார்: தொண்டர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Padappai ,Guna Bajaj ,Chennai ,Padappai Guna ,N. Gunasekaran ,Maduramangalam ,Sriperumbudur, Kanchipuram district.… ,BJP ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...