×

மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி: இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று தொடங்குகிறது.

இன்று முதல் 20.10.2023 வரை நடைபெறும் கண்காட்சியில், மகளிர் சுய உதவி குழுக்கள் தங்களின் உற்பத்தி பொருட்களான பட்டு, பருத்தி ஆடைகள், மண்பாண்ட பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பல்வேறு உலோகங்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்கள், தரமான வீட்டு உபயோக பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பல்வேறு தோல் பொருட்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், வாசனை பொருட்கள், மர சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், மூலிகை பொருட்கள், பாரம்பரிய கிராமிய உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கண்காட்சியை அனைவரும் கண்டுகளித்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு மகளிர் சுய உதவி குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி: இன்று தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Navratri ,Starts Today ,Chennai ,Tamil Nadu Women's Development Corporation ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை