×

2வது திருமணம் செய்த கணவன் வீட்டு முன் தர்ணா தற்கொலைக்கு முயன்ற பெண்

சித்தூர்: கணவன் 2வது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண், அவரது வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆந்திர மாநிலம் சித்தூர் மண்டி தெருவைச் சேர்ந்தவர் நாசிர்(32). இவரது மனைவி சபீனா. இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது மகன் ரியாஸ்(2). இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சபீனா தனது தாய் வீடான திருப்பதிக்கு சென்று விட்டார். உறவினர்கள், பெரியோர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனால் சிறிது நாளில் மீண்டும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சபீனா கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நசீருக்கு கடந்த வாரம் சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சபீனா, நேற்று குழந்தையுடன் தனது கணவர் வீட்டுக்கு வந்து அவரிடம், நான் உயிரோடு இருக்கும்போது 2வது திருமணம் செய்து கொண்டது ஏன் எனக்கேட்டார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது சபீனா, தனக்கும் தனது மகனுக்கும் நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் எனக்கூறி வீட்டின் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் தான் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2வது திருமணம் செய்த கணவன் வீட்டு முன் தர்ணா தற்கொலைக்கு முயன்ற பெண் appeared first on Dinakaran.

Tags : Tarna ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...