×

ஆபாச பேச்சை கண்டித்து கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் ரோஜா: தெலுங்கு தேச மாஜி அமைச்சர் கைது

திருமலை: அமைச்சர் ரோஜா குறித்து ஆபாசமாக பேசிய மாஜி அமைச்சரை போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து அமைச்சர் ரோஜா கண்ணீர்விட்டு அழுதபடி பேட்டியளித்த சம்பவம் ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணா, ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சரான நடிகை ஆர்.கே.ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை முறையை இழிவுபடுத்தும் விதமாக ஆபாசமான வார்த்தைகளை பேசினார். இதற்கு ஆந்திர மகளிர் ஆணையம் சார்பில் கண்டனம் தெரிவித்து டிஜிபிக்கு புகார் அளித்தனர். இதனையடுத்து குண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் சத்திய நாராயணாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பதியில் அமைச்சர் ரோஜா கண்ணீர்விட்டு அழுதபடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ரெக்கார்ட் டான்ஸ், லாட்ஜூக்கு போனதாகவும், ப்ளூ பிலிமில் நடித்ததாக மாஜி அமைச்சர் என்னை பற்றி கூறியுள்ளார். உங்கள் வீட்டில் மனைவி, மகள், மருமகள்கள் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாளை இதேபோன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் பேசுவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இவ்வாறு பேசுவீர்களா? 1999ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தபோது அக்கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன். அப்போது எனது கேரக்டர் சரியில்லை என புறக்கணிக்க வேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது அமைச்சர் ரோஜா கண்ணீர் விட்டு அழுததால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஆபாச பேச்சை கண்டித்து கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் ரோஜா: தெலுங்கு தேச மாஜி அமைச்சர் கைது appeared first on Dinakaran.

Tags : Minister Roja ,Telugu Desa ,minister ,Tirumala ,Roja ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி