×

ஓரின சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவன் கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டான். குற்றவாளியை உடனே கைது செய்ய கோரி உறவினர்கள் நேற்றிரவு ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த வீரமணி. கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜீவா (17). விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளில் பிளஸ் 2 படித்து வந்தார்.

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்வதற்காக நேற்று காலை பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது பெலாந்துரை வாய்க்கால் அருகில் சிறுநீர் கழிப்பதற்காக ஜீவா சென்றார். அந்த நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர், பின் தொடர்ந்து வந்து ஜீவாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். சக நண்பர் பிரித்தீஷ்ராஜ் காப்பற்ற முயன்றபோது, அவருக்கும் சில இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் ஜீவாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஜீவாவின் தாயார் சீத்தாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து ஆனந்தை தேடி வருகின்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஜீவா, இதே பகுதியை சேர்ந்த பிரித்தீஷ்ராஜூடன் ஒன்றாக தினமும் பள்ளி சென்று வந்துள்ளார். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஆனந்த் (22), பெண்ணாடம் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருடன் ஜீவா நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடும் போது, ஜீவாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஜீவாவை தினமும் விருத்தாசலம் அழைத்து சென்று கட்டுபோட்டு ஆனந்த் அழைத்து வந்துள்ளார். இந்த நட்பின் அடிப்படையில் ஜீவாவை ஆனந்த் வீட்டுக்கு வரவழைத்து ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தினாராம். ஜீவா மறுத்ததோடு, கடுமையாக ஆனந்தை திட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே ஒரு பெண்ணை ஜீவாவுடன் தொடர்புப்படுத்தி ஆனந்த் மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, ஆனந்தின் செல்போனை பறித்து உடைத்து போட்டுள்ளார். மேலும் ஓரின சேர்க்கை குறித்து ஆனந்தின் குடும்பத்தினரிடம் ஜீவா கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், நேற்று பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது ஜீவாவை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.

ஆனந்தை கைது செய்தால்தான் ஜீவாவின் உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தை நேற்றிரவு முற்றுகையிட்டு கோஷமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. கொலை செய்யப்பட்ட ஜீவாவின் உடல் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனந்தை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஓரின சேர்க்கைக்கு மறுத்த பள்ளி மாணவன் கொலை; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Srimushnam ,Dinakaran ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு..!!